பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

காமராசரின் கதர்த் துண்டு

நான்
காமராஜரின் கதர்த்துண்டு.

தமிழ்நாட்டு மக்களைத்
தோள்களில் சுமந்த
தூயவரின் தோள்களில்
என்னை நீங்கள்
பார்த்திருக்கலாம்.

கர்மவீரரின் உடைப்பெட்டியில்
அனுமதிக்கப்பட்ட
இரண்டு கதர்த்துண்டுகளுள்
நானும் ஒருவன்.

கர்மவீரரின் கைகள்
உடைப்பெட்டியைத் துழாவுகையில்
தூயவரின் கைகள்
என்னைத்
தொடுவதற்காய்த் தவமிருப்பேன்.
தொடக் காத்திருப்பேன்.

கர்மவீரரின் வைரக் கைகளால்
எடுக்கப்பட்டு,  
தோள்களில் நான்
அமரும் தருணங்களில்                                      
உலக இன்பத்தின் உச்சம்
என்னுள் படரும்.

என் சிறகுகள்
விரியும்.

எனக்கான இலக்கின்
எல்லை முடியும்.


வறியவர்களை
அவர் தழுவுகையில்
ஆயிரம் பூக்களின் வாசம்
என்னுள் பரவும்.

மக்கள் மதிக்கும்
தோளின் முடிசூடா மன்னன்
நான் மட்டுமே!

நான்
கிழிந்து நைந்து
உருக்குலைகையில்
என் குடிசை வீட்டில்
சுடரேற்றிய
சாதனைத் தமிழனின்
காற்செருப்புத் தூசுகளைத்
தூய்மையாக்கும் காவலனாய்
உடனிருந்து மரணிப்பேன்.


ஏனென்றால்..
நான்
துண்டல்ல….
தூயவன்.

No comments:

Post a Comment