பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

காமராசரின் செருப்பு.

நான்
சாதனைத் தலைவனின்
செருப்பு.

வரலாற்றுச் சுவடுகளைச்
சுமக்கும் பேற்றினை
நான்
பெருமையாகச் சுமக்கிறேன்.

நான்
அறுபட்ட தருணங்களில்
அண்ணலின் கரங்களால்
அறுவை சிகிச்சை செய்துகொள்கிறேன்.

சுமை
எனக்கு என்றுமே
கசந்ததில்லை.

சுகம்
எனக்கு என்றுமே
கனத்ததில்லை.

சேறுகளில் நான்
மூழ்கி எழும்போது
சேரிகளின்
மூச்சு மலருவதுண்டு.

படிக்காத மேதையின்
பாதங்களைப் பாதுகாப்பதில்
இராணுவக் கடமையின்
மேன்மையுடன் உயிர்க்கிறேன்.

ஐவகை நிலங்களின்
மண்துகள்கள் என்னுள்
எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருக்கும்.

ஓடிக்கொண்டேயிருக்கும் கால்களைப்பார்த்து
நான்
களைப்படைந்ததேயில்லை.

ஓடத்தின் கவிழ்தலில்
காற்றைச் சபிக்காத
கர்மவீரரின் தன்னம்பிக்கை
என்னுள் எப்போதும்
பரவியிருக்கும்.

புழுதிக் கால்களுடன்
பயணிக்க
நான் பதிலியாய்ப்
பலநேரங்களில் அனுப்பப்பட்டிருக்கிறேன்.

சபிக்கப்படும் செருப்பு
சாதனைத் தடங்களை
சுமக்கையில் மட்டும்
அரியணை ஏறுவதுண்டு.

என்னை
அரியணை ஏற்றிய
அற்புத மனிதரின்
அடுத்த பிறவியிலும்
நான்
அவரையே சுமக்க வேண்டும்.

வறுமைவலியை விரட்டும்
வித்தகரின்
விரல்வலியை விரட்ட

என்னைத்தவிர யாருளார்?

No comments:

Post a Comment