பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

காமராசரின் நாற்காலி

நான்
மக்கள் தலைவனின்
மேன்மை நாற்காலி.

என்னில்
அமரும் சூழல்களை
என்றுமே கர்மவீர்ர்
விரும்பியதில்லை.

ஒவ்வொரு
அமர்தல் நிகழ்கையிலும்
ஆயிரம்ஏழைக்கு வேலையும்
ஆயிரம்உழவனுக்கு விதையும்
அண்ணலால்  உறுதியாக்கப்படும்.

நான் நகர்ந்ததைவிட
என்
நாயகனின் நகர்தல்
நீண்டு கொண்டேயிருக்கும்.

தரை
பலநேரங்களில்
என்இடத்தைப் பிடித்துக்கொள்வதால்
சுற்றுப் பயணங்களில்
நான் பலமுறை
உதாசீனப் படுத்தப்பட்டிருக்கிறேன்.

ஏழைக் குடிசையின்
கயிற்றுக் கட்டிலின்
சிரிப்புச் சிம்மாசனம்
என்னுள்ளே
எப்போதாவதுதான் நிகழ்வதுண்டு.

ஏழையின் மனங்களில்
ஏற்றத்தினை மலரச்செய்ய
உருவாக்கப்பட்டவனென்று
கர்மவீரரால்
நான்
போற்றப்பட்ட நிமிடங்களில்
என்னுள்ளே
பெருமகிழ்வு பொங்கும்.

என் பெருமையும்
என் பொறுமையும்
என் பயணமும்
என்
வரலாற்றுவள்ளலின்
வாழ்வுப்பக்கங்களில்
காற்புள்ளியாகவே
நீண்டிருக்கும்.

நான்
நிரந்தரமில்லையென்று என்னிடம்
கர்மவீர்ர் கூறுகையில்
நான் மறுத்துச் சொல்வேன்.

நான்
நிரந்தரமானவன் இல்லைதான்
ஆனால்
நீ
என்றும் நிரந்தரமானவன்.


No comments:

Post a Comment