பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 11 July 2013

காமராசரின் கதர்ச்சட்டை

நான்
கருப்புத் தங்கத்தின்
கதர்ச்சட்டை.

என்
நூலிழைகள்
கருணையினால் நூற்கப்பட்டவை.

என்
காவிய நாயகனின்
குடிசைப் பயணத்தின் போது,
சகதிகளின் ஓவியமும்
சாக்கடை நாற்றமும்
என்மேல்
தங்கிவிடுவதுண்டு.

வறுமை
வளமையாகும் வரை
இத் தங்கல்கள்
சட்டையைச் சார்ந்திருக்கும்.

சிலநேரங்களில்
ஏழையின்
வாழ்வுப் பொத்தான்கள்
சரிசெய்யப்படும் வரை

என்
உடைந்து போன
சட்டைப் பொத்தான்களைச்
சரிசெய்ய அனுமதி மறுக்கப்படும்...

என்
சட்டைப்பையில்
எப்பொழுதும் ஏழையின்
விண்ணப்பங்கள் மட்டுமே
நிரம்பியிருக்கும்.

ஏழைக்குழந்தைகளின்
அன்பு அவசரங்களில்
நான்
பலமுறை கிழிந்திருக்கிறேன்.

ஒட்டடைகளாய்த் தங்கிவிட்ட
கிழிசல்களையும் அழுக்குகளையும்
என்
கர்மவீர்ர் என்றுமே சட்டைசெய்ததில்லை.

ஏழைக்குச் சட்டை
கிடைக்க வேண்டுமென்பதற்காக
நான்
பலமுறை
பிரார்த்தனை செய்திருக்கிறேன்.

அப்பொழுதுதான்
நான்
அழகுச் சட்டையாக

சரிசெய்யப்படுவேன்.

No comments:

Post a Comment