பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 1 May 2014

விடுதலை மனது!






   
         நேர்முகத்தேர்வு நாளன்று
     கல்விச்சான்றுகளும்
     உணர்வின் விடுதலையும்.
     சிறைவைக்கப்பட்டன..

     காலைப்பொழுதுகளில்..
     செயற்கை வணக்கங்களும்
     வகுப்பறைச் சுவர்களில்
     செயற்கைச் சுவாசங்களும்
     இயல்பை மீறின.

     பணத்தால் கொழுத்துப்போன
     செழித்த முகங்களின்
     அகந்தையில்
     அன்பும்புன்னகையும்  அழிந்துபோயின.

     அச்செழுத்துகளை அச்சேற்றிய
     கருப்பு மனங்கள்
     பார்க்கும் இடமெல்லாம்
     மதிப்பெண் தேடின.

     எங்கும் மறுக்கப்பட்ட
     விடுதலைத் தடங்களில்
     மாணவ அடிமைகள்
     சந்தை மாடுகளாய்
     விலை பேசப்பட்டன.

     நுனிநாக்கு ஆங்கிலமோகத்தில்
     முதற்சொல் அம்மாவும் ஆடும்
     மறக்கடிக்கப்பட்டன.

     இயந்திரங்கள் தயாரிக்கும்
     பன்னாட்டு நிறுவனங்களாய்
     மாறிப்போன கல்விக்கூடங்கள்
     ஒருநாள் மாறும்.

     புளியங்கொட்டையில்
     அகரம் படிக்கும்
     மழலைக் கல்வியும்
     மகிழ்வாய் மலரும்.

     அடிமைக்கல்வியின்
     விடுதலை வித்து
     வெடிக்கும் நொடி
     வெகு தொலைவிலில்லை.

No comments:

Post a Comment