பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 1 May 2014

வசை வாழ்த்து !







     ஆசிரியர் அறையின்
     ஓரமாய் கவிழ்ந்திருக்கிறது..
     தமிழாசிரியரின் நாற்காலி.

     கோனார் உரையின்றிக்
     கோடு போடக்கூட இயலாதென்று
     வலப்புற வசை.

     நாற்பது நிமிடங்களில்
     நானூறு செய்யுள்களை
     வாசித்துவிடுவீர்களென்று
     இடப்புற வசை.

     கணக்கிற்கும் அறிவியலுக்கும்
     கால்தூசு பெறமாட்டீர்களென்று
     கீழ்ப்புற வசை.

     ஆங்கிலத்திற்கு முன்னால்
     நீங்கள் அடிமையென்று
     மேற்புற வசை.

     உங்களின் ஊதியம்
     வீணென்று
     தலைமை வசை.

     வரலாற்று வசை
     இன்னும்
     வந்தபாடில்லை.

     அத்தனை வசைகளும்
     வாழ்த்தாயின..
     வகுப்பறைக் குரல்களால்!

     வகுப்பறையின்
     கடைசிஇருக்கை சொன்னது ..
     தமிழ் வகுப்புகளில் மட்டுமே
     நாங்கள்
     தலை நிமிர்கிறோம் !

     முன்னிருக்கை சொன்னது..
     எங்களுக்குப் புரிந்த பாடம்
     தமிழொன்று மட்டுமே.

     தெரிந்தால் சொல்லுங்கள் !

     புரியாத உறவும்
     புரியாத உணர்வும்
     புரியாத நிஜமும்
     புரியாத தடமும்
     வெற்றிப் புள்ளியின்
     நற்தொடக்கமென்ற
     கல்விக்கொள்கையை வகுத்தது யார் ?

     ஒருவேளை

     வசைகளாயிருக்குமோ ?..

8 comments:

  1. தமிழாசிரியர்களிலும் மொக்கைகள் உண்டு. மற்ற ஆசிரியர்களிலும் பொக்கைகள் உண்டு அய்யா. அவரவர் பாடத்தை ஒழுங்காக ஆர்வமாகப் படித்தவரும், நடத்துபவரும் வெற்றிபெறுகிறார்கள். நாம் யாரையும் எதிரிகளாக நினைப்பதில்லை. நினைப்பவர்தமை நாம் பொருட்படுத்துவதில்லை.
    காலம் அறிந்து கூவும் சேவலைக்
    கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது,
    கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
    கணக்காய் கூவும் தவறாது.
    நிற்க உங்களின் அருமையான (“வீதி“ கூட்டத்தில் வாசித்த) சிறுகதையைப் பெருநாழியில் பதிவிடுங்கள் அய்யா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் எதிர்வினைக்கு மிக்க நன்றி ஐயா. வீதி கூடத்தில் வாசித்த சிறுகதையைப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பியுளேன் ஐயா. அது பிரசுரமானதும் வெளியிடுகிறேன். மிக்க நன்றி.

      Delete
  2. அருமை தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழா !

      Delete
  3. வணக்கம் ஐயா
    இன்றைய கல்வியின் போக்கை இதை விட அழகாக கவியால் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. அழகான கருத்தைக் கொண்ட உண்மையான வரிகள். தொடருங்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கோனார் தமிழ் உரையினை வைத்துத் தமிழாசிரியர்கள் கேலி செய்யப்படுகின்றனர் ஐயா. தமிழாசிரியர்கள் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

      Delete
  4. தமிழாசிரியரின் நிலையோடு தமிழின் நிலையையும் கவிதை சொல்லிவிட்டது.சிறப்பான கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசித்தனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

      Delete