பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 29 December 2014

வாழ்த்தும் வணக்கமும் - பூமணியின் எழுத்துச்சிற்பம் அஞ்ஞாடி.




     அஞ்ஞாடி' நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


           எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். இவர் 1947-ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
             இவர், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்
       தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு பிறகுஎன்ற கலாபூர்வமான நாவலை எழுதியவர் பூமணி.
                   சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கிவரும் கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. வருடாவருடம் சர்ச்சைக்குள்ளாகும் சாகித்ய அகாடமி விருது சிறந்த எழுத்தாளரான பூமணிக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டுள்ளது.
               ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கற்பனை கிராமமான கலிங்கல் என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட இரு சாதிகளைச் சேர்ந்த ஆண்டி மற்றும் மாரி என்ற இரு மனிதர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து நாவல் தொடங்குகிறது. காலம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்திராகாந்திப் படுகொலையில் நாவல் முடிகிறது. இந்தக் காலப்பகுதியில், ஒரு ஊர் மற்றும் இரு குடும்பத்தினரின் வம்சபுராணமாக இந்த நாவல் இருந்திருந்தால் தமிழின் எதார்த்த நாவல்களில் பத்தோடு பதினொன்றாக இப்படைப்பு இருந்திருக்கும்.


                  ஆனால் 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம் தொடங்கி, பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களின் யுத்தங்கள், ஜமீன்கள் உருவாக்கம், கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம்கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கதைகளோடு புதைத்து வைத்துள்ளது இந்த நாவல்.
                 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சங்களின் போது மக்கள் அவதிப்பட்ட அனுபவங்களை அஞ்ஞாடி போல இவ்வளவு தீவிரமாக வேறு எந்த நாவலாவது பதிவுசெய்திருக்குமா என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளியான ஜெயமோகனின் வெள்ளையானையிலும் தாதுவருஷ பஞ்சம் சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



                
       போர்கள், சண்டைகள், மோதல்களுக்கு நடுவில் ரத்தமும் சதையுமாக அஞ்ஞாடி நாவலில் கதாபாத்திரங்கள் உலாவருகின்றனர். கிராமிய வாழ்க்கை நோக்குகள் கரிசல் மொழியில் அங்கதத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்து போன காலகட்டத்தின் வாழ்வாதாரம் மற்றும் பொருள்சார் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளும் களஞ்சியமாகவும் இந்நாவலை வாசிக்கமுடியும்.
               மொழிக்கு, பண்பாட்டுக்கு ஒரு படைப்பாளியின் கொடை இதுவாகவே இருக்கமுடியும். பூமணி அதை தனது அஞ்ஞாடிநாவலின் மூலம் சரியாகவே சாதித்துள்ளார்.
             எழுத்துலகின் எளிமையான இச்சித்திரம், இன்னும் ஒளிவீசி உலக இலகியத்தின் வரிசையில் தமிழை முன்னிறுத்தும் காலம் வெகுதூரமில்லை.

      அஞ்ஞாடிச் சிற்பிக்கு அன்பு வாழ்த்துகள் !

Saturday 27 December 2014


ஆளுமைகளின் வலைப்பூக்கள் ஆளுமைகளின் வலைப்பூக்கள் : வணக்கம். இன்று ஏழாம் நாள். என்னுடன் பயணித்த வலைச்சரத்திற்கு மிக்க நன்றி. புதுக்கோட்டை கணினிப் பயிலரங்கம் சார்ந்த செய்திகளை முன்னொரு இடுகையில் கூறியிருந்தேன். நாங்கள் வலைப்பூவில் இவ்வளவு அளவளாவக் காரணம் எங்களுக்குக் கருத்தாளர்களாக வந்த வலைப்பூ ஆளுமைகள் எனலா. இவ்விறுதி நாளில் அவர்களை அறிமுகப்படுத்துவது உங்களுக்குப் புதிதில்லை எனினும் நன்றியின் மேல் எங்களுக்கு என்றுமே மிகுந்த மதிப்புண்டாகையால் அவர்களின் பெருநகர்வுகளைப் பற்றி அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன். எட்வின் மாற்றுச்சிந்தனை முகம். மனிதர்களை நேசிக்கத்தெரிந்த கலை. வாசிக்கத் தெரிந்த கண்கள். இவரின் வரிகளில் தெரியும் இயல்பும் யாருக்கும் புலப்படாத இன்னும் கொஞ்சமும். வேலையில்லை மொடாக்குடியன் கஞ்சா உறிஞ்சி பொறுக்கி எல்லாம் சரி யாரிடம் இல்லை சரியாயிடும் பையன் நல்லவனா சொல்லுங்க? வாழ்வியல்பின் யதார்த்தங்கள் திரு. எட்வினுக்கே வந்த கலை. http://www.eraaedwin.com/ கரந்தை ஜெயக்குமார் என்னுடைய வலைப்பூவின் ஒரே வாசிப்பாளர் இவர் மட்டும் தான். ஒரு கணித ஆசிரியராக இருக்கும் இவரின் தமிழறிவு காணவியலாதவை. இவரின் வலைப்பூ சார்ந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன். எழுத்தின் வல்லமை இவரிடம் இயல்பாய் அமைந்திருப்பது இவருக்குக் கிடைத்த பெரும் வலிமை. இவர் எனக்கு முன்னெழுத்து. இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள். என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன். வேலு நாச்சியார் பற்றீ இவர் எழுதி வரும் பதிவு மிக்க சுவையாய் உள்ளது. ஒரு ஆசிரியனாய் இவரின் கருத்துகளை வகுப்பறையில் ஆழ்வதுண்டு. http://karanthaijayakumar.blogspot.com/2014/12/5.html#more திண்டுக்கல் தனபாலன் . வலைப்பூச் சித்தர். இது நாங்கள் வைத்த புனைப்பெயர். பேருந்து நிலையத்திலிருந்து நான் தான் இவரை பயிலரங்கக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பெருமை எனக்குக் கிட்டியது, ( ஐயா நிலவனுக்கு நன்றி ) பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டோம். இவரின் வகுப்பை முழுமையாகக் கவனிக்க இயலவில்லை. என் வலைப்பூவைச் செப்பனிட இவரைத் தான் அழைத்துள்ளேன். அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - அறிவுடைமை - 421 - இக்குறள்பாவிற்கு டிடி தரும் அறிவின் செய்தி வியக்க வைக்கிறது. http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html#more முனைவர் ஜம்புலிங்கம் மிகப்பெரிய எழுத்தாளுமை கொண்டவராக இருந்தாலும் துளிக்கூட அறிவின் கர்வம் இவரிடம் இருந்ததில்லை. முனைவர். அருள்முருகன் ஐயா அவர்களின் ஆய்வறிமுகத்தில் இவரின் எதிர்வினை கண்டு புருவம் உயர்த்தியதுண்டு. மிகவும் எளிமையானவர். எழுத்திலும் கூட ஆழமானவர். துளிர்விடும் விதைகள் பற்றிய இவரின் அறிமுகவெழுத்துகள் அருமை. http://drbjambulingam.blogspot.com/ டி.என்.முரளீதரன் ஒரு கல்வி அதிகாரி இலக்கியத் தளங்களில் இயங்குவது மிக அரிதானது. ஏனெனில் இது நெருக்கடிகளின் நொடிகள் அதற்கெல்லாம் விதி விலக்காக சிலர் இலக்கியத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை ( எங்கள் புதுகை மு.க.அ.போல் ) இவரின் எழுத்தாழம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. வைரமுத்துவின் வரிகளை அவர் எடுத்துக்கூறி அதில் உடன்பாடிலா வரிகள் காணுமாறு அழைத்திருந்தமை அருமை. இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் எடைகாட்டி இன்பம் இழைப்பாள்-மடையா கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை விலைமகள் ஆசை விடு ஐயா , எனை உறுத்திய வரிகள் இதுவென எண்ணுகிறேன். http://www.tnmurali.com/2014/12/aids-awareness-vairamuthu-kavithai.html தமிழிளங்கோ ஒரு வங்கி அதிகாரி இவ்வளவு தமிழாளுமை கொண்டு இயங்குவது உயர்விலும் உயர்வு. இவரின் ஒளியோவியங்கள் என்னை மிகவும் ஈர்த்த்து. கணக்கிலாக் கணக்குகள் பற்றிய அவரின் பதிவு விழிப்புணர்வின் நிழல். மிக்க நன்றி ஐயா. http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_19.html sumazla இதையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள். ஒரு பெண் பதிவரின் மிகச்சிறந்த வலைப்பூ. இவர் எழுதிய வலைப்பூ பற்றிய புத்தகமே என்வ் வலைப்பூவிற்கான விதை. நல்ல வலைப்பூக்களூல் இதுவும் ஒன்று. http://sumazla.blogspot.com/ அன்புடன், சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி )

Friday 26 December 2014

கூடுதல் முகம் - குருநாதன்.


வணக்கம். இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம் . இருப்பினும் அதில் என்னைக் கவர்ந்த சில இடுகைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டேன். அத்தகு வலைப்பூக்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன் அன்புடன் விளையாட்டு, அரசியல் என இரு விடயங்களைப்பற்றி எழுதி வருகிறார், இவ்வாண்டு உலகக்கால்பந்துக் கழகத்தின் பலோன் டி.ஓ. விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீர்ர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை தமது இடுகையில் கூறியிருக்கும் இவரது விளையாட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. தமிழா தமிழா தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்களை வெளியிட்டு அதற்கான பொருளையும் கூறியுள்ள பாங்கு போற்றத்தக்கது. பக்குடுகை நன்கணியாரின் உலக வீடுபேறு அடையும் வழி பற்றி ஏங்கும் பாடலைப் பதிவு செய்த பதிவர் அதைக் கண்ணதாசனோடு ஒப்பிட்டமை சிறப்பு. மணிஜி தான் சந்தித்த பெண் ஓட்டுநரிடமிருந்து சில அனுபவங்களைப் பெறும் மனிஜியின் ஆகாயத்தாமரை மிகச் சிறப்பு, அதிலும் தன் பெயரும் அவளின் கணவனின் பெயரும் ஒன்றாகவே இருந்த இணையின் வியப்பிலிருந்து மீள்வதற்குள் அனுபவம் முடிந்து விடுகிறது. பெண்களின் வலி ? மண் மரம் மழை மனிதன் பாசுமதி அரிசி, மேல்தட்டு மக்களுக்கான உணவின் ருசி. ஆனாலும் அதன் தாவரவியல் அறிவினைத் தந்திருக்கும் இவ்வலைப்பூ என்னைக் கவர்ந்தது, காரணம், இதன் தலைப்பை மீண்டும் ஒருமுறை பாருங்களேன். இன்னும் நிறைய மூலிகைகளை நீங்கள் இங்கு முகரலாம். TamilFuser இருசக்கர வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் தருணங்களில் அரசியலை நான் நினைப்பதுண்டு, அந்த அரசியல் அன்று மட்டும் பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த எரிபொருள் அரசியல் பற்றி ஆழமாகப் பதிவிட்டிருக்கும் சதுக்க பூதம் என்னைக் கவர்ந்து விட்டார். பெட்ரோல் அரசியல் உங்களுக்கும் பிடிக்கும்.

Thursday 25 December 2014

நத்தார் விழா- ஒரு பார்வை.








  ரிஹஸ்-பேல் லெட்டீட்ஸ்" ( ப்ரிக்கன் )
" யிடா சைடான் வா சானாஹ் ஜடிடாஹ்" ( அரபிக் )
" செலாமட் ஹரி நேடால்" ( மலேசியா )
" ¤வோ நாபா பார்ஷா" ( பெங்காலி )
" பெலிஸ் நவிடாட்" ( சிலே )
" கன் ட்சோ சன் டான் கங் ஹாவ் சன்" ( சீனம் )
" ஜோயெக்ஸ் நோயெல்" ( பிரென்ச் )
" ஹைவா ஜோலுவா" ( பின்னிஷ் )
" ஷப் நயா வர்ஷ்" ( மராத்தி )
" ஷப் நயா பராஸ்" ( யிந்தி )
" ஷங் டான் சுக் ஹா" ( கொரியன் )
" காட் ஜுல்" ( நார்வேயன் )
" பெலிஸ் நெவிடாட்" ( ஸ்பானிஷ் )
" மாலிகாயன் பாஸ்கோ" ( பிலிப்பைன்சு )
" ஷாவாடி பீ மாய்" ( தாய்லாந்து )
" நயா சால் முபாரக் ஹோ" ( உருது )
" சங் மங் ஜியாங் சின்ஹ்" ( வியட்நாம் )
" நடோலிக் லாவ்வென்" ( வேல்ஸ் )
" செஸ் டிடாமொ போசிக்" ( யுக்கோஸ்லேவியன்)

              இதெல்லாம் என்ன? என்கிறீர்களா? உலகெங்கும் கிறிஸ்மஸ் என்று தலைப்பு போட்டுவிட்டு தமிழில் மட்டும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொன்னால் போதுமா? அதுதான் உலகத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்பதை எப்படிச் சொல்கிறார்கள் என்று அவரவர் மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றது. எந்த வாசகம் எந்த நாட்டின் அல்லது எந்த மொழியின் வாழ்த்து என்பதை கட்டுரையின் கடைசியில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்துமஸ் என்றால் என்ன? " கிறிஸ்துமஸ் " என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.
1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் 281 மில்லியன் மக்கட் தொகையில் 241 மில்லியன் மக்கள் அதாவது 85 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்களாக யிருப்பதால் கிறிஸ்து பிறப்பை மிகவும் விசேடமாகக் கொண்டாடுகின்றார்கள்.

           கிறிஸ்து பிறப்பறிவிப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் துவங்கினர். ஆனால் முதன்முதலில் இந்த விழாவைக் கொண்டாடிய நாடு இங்கிலாந்து தான்! யேசு பிறந்த பெத்லேகமில் மற்றும் உலக நாடுகளில் யேசு பிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத்துவங்கினர் என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் உண்மைகள்!

       கிறிஸ்துமஸ்.காம் என்று கூகிலில் தேடினால் 354,000,000 வலைத்தளங்களும்,கிறிஸ்துமஸ் கதைகள் என்று தேடினால் 64,900,000 வலைத்தளங்களும், X'mas என்று தேடினால் 6,790,000 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் என்றுதேடினால் 90,600,000 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகள் என்று தேடினால் 8,830,000 வலைத்தளங்களும் கண்ணில் தட்டுப்படுகின்றது !

கிறிஸ்துமஸ் இப்படித்தான்.....
         யேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடைகாண முற்பட்டுள்ளனர்.

       உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகளும் கேளிக்கைகள் என்றும்தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள். குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர் ! இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும்! 

       குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால இது மிகையல்ல! இந்த நாட்கள்தான் கிறிஸ்துமஸ் முகிழ்க்கக் காரணமானது!

       பைபிளில் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், "பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில்மகனாகப் பிறப்பார்," என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், " நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது..." என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தேவாலயங்கள் ஒன்றுகூடி யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிடமுடிவு செய்து அறிவித்தன!

       முதன் முதலில் கிறிஸ்துமஸ் சனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள்தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது! இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார். இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்தவர்களில் அப்போதைய பெரும்பிரிவினரான பாகான் இனத்தவர்கள் கொண்டாடிய "சேட்டர்நேலியா" திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.
       இந்த கிறிஸ்துமஸ் விழா மெல்லமெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது. 432ல் எகிப்திற்கும் அங்கிருந்து யிங்கிலாந்திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம் வரையிலும் பரவியது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் எழுந்த மத மறுமலர்ச்சி, கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கினர். ஆனால் 1645ல் லிவர் கிராம்வெல் மற்றும் அவருடைய புரிடான் (Puritan) படைகளும் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதித்தது. அனால் இரண்டாம் சார்லஸ் ஆட்சியைக் கைப்பற்றியபோது மீண்டும் கிறிஸ்துமஸ் விழாவை குதூகலமாகக் கொண்டாட உத்திரவிட கிறிஸ்துமஸ் விழா பிரசித்தி பெற்றது!

       கிறிஸ்துமஸ் அமெரிக்காவைச் சற்றுத் தாமதமாகத்தான் வந்தடைந்தது. 1659 லிருந்து 1681வரை கிறிஸ்துமஸ்கொண்டாடுவது சட்டப்படி குற்றமாக அறிவிக்கபட்டு தடை செய்யப்பட்டிருந்தது ! பாஸ்டனில் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் விளைவு ஆங்கிலேய நடைமுறையான கிறிஸ்துமஸைக் கொண்டாட முற்படாததுடன் அமெரிக்கர்களுக்கு எதிரான கிறிஸ்துமஸ் என்ற முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் குடியேறிய காலனிகளிலும் ஜேம்ஸ் டவுன் போன்ற இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

            19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் கோலாகலமாகக் கொண்டாட கிறிஸ்துமஸ் திருவிழா தேவை என்ற அமெரிக்கர்கள் ஒருமனதாகக் குரல் எழுப்ப கிறிஸ்துமஸ் நாள் தேசிய விடுமுறையோடு கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை 1870ம் ண்டு சூன் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை விருந்தும் கேளிக்கையும் குடும்பங்கள் கூடும் ஒரு அரிய விழாவாக மாற்றம் செய்துகொண்டனர்.

      அடுத்த நூறு ஆண்டுகளில் அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் என்றால் இப்படித்தான் என்ற பாரம்பரியத்தை வெகு நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல், வாழ்த்தட்டைகள் அனுப்புதல், பரிசுகள் கொடுத்தல், கிறிஸ்மஸ் தாத்தா (சாண்ட்ட கிளாஸ் ) என்று பல பரிமாணங்களை ஏற்படுத்தி தனி கலாச்சார முத்திரையை பதித்துக்கொண்டனர். அதுவே இன்றளவும் தொடர்கின்றது.

     ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் சாதாரணமாக ஒரு திருப்பலி (Mass) என்ற அளவிலிருந்து படிப்படியாக கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு(Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப் பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என்று பட்டியல் நீண்டது பின்நாட்களில்தான்!

12 நாள் கிறிஸ்மஸ்....
      டிசம்பர் மாதம் 25ம்தேதியிலிருந்து சனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நட்களும் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் பல ஊரகப்பகுதிகளில் கடைப்பிடித்திருக்கின்றனர். " The Twelve Days of Christmas " என்ற புகழ் பெற்ற பாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

      இந்த நாட்களில் டல் பாடல் என்று தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக் கின்றனர். அந்தக் காலகட்டத்தில் உருவானதுதான் " CAROL " எனப்படும் குழு நடனப் பாடல்! வட்டமாகச் சுற்றி நின்றுகொண்டு நடனமாடிக்கொண்டே பாட்டிசைத்து கிறிஸ்து பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இதற்கென்றே பாடற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்களில் பாடுவதையும், சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலாப் போவதும், தங்கள் வீட்டருகே வரும்போது அவர்களுக்கு குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். இன்றும் பல நாடுகளில் சில யிடங்களில் யித்தகைய குழுப்பாடல் பாடி வலம் வருவதைக் காணலாம்.

பரிசுப்பொருட்கள்....
     கிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால்? ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக்கொள்கின்றார்கள் மக்கள்? புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, "உலகை உய்விக்கப்பிறந்துள்ள அன்னை மேரியின் தவப்புதல்வராம் குழந்தை யேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள்அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்..." என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.
இருந்தாலும் 1800கள் வரையில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கொண்டதாக பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் "சாண்ட்ட கிளாஸ்" என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்.....
        எந்த நாளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்துள்ள ஒரு விடயம் ஆகும்! கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் முதன் முதலாக வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை லண்டன் மாநகரைச் சாரும். 1843ம் வருடத்தில் லண்டனும் 1846ல் அமெரிக்காவும் வெளியிட்டன்; அமெரிக்காவில் மட்டும் 2 பில்லியன் கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றது என்பது வாழ்த்தட்டை விற்பனையகங்கள் தருகின்ற புள்ளிவிபரமாகும்!
கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறை நாளாகவும் புனித நாளாகவும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் நாள் என்றாலும் குறிப்பாக குழந்தைகளுக்குரிய சிறப்பு தின நிகழ்வாக அமைந்துள்ள ஓர் நாள் என்றால்அது மிகையல்ல; அமெரிக்கக் கூட்டரசு, மாநில அரசுகள், அனைத்துக் கல்லுரிகள்,பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மட்டும் என்றில்லாமல் தனியார் நிர்வாகங்கள் என்று விடுமுறை விடப்பட்டும், சில நிர்வாகங்கள் ஒன்றிரண்டு நாட்களை விடுமுறையாக அளித்தும் இந்த நாள்
சிறப்பிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு வருடத்தில் வரும் ஆறு புனித நாள் நிகழ்வுகளுள் கிறிஸ்துமஸ் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

       அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மட்டுமே வாரக்கணக்கிலான மிகப்பெரிய ஷாப்பிங்காகத் திகழுகின்றது. அநேக சிறு வர்த்தக் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தின் 70 சதவிகித வருவாயை ஈட்டித் தருவதே இந்தக் கிறிஸ்துமஸ் வர்த்தகம் தான்!
டானியல் பூர்ஸ்டின் தனது புத்தகத்தில், 1860 வரை கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பிரபலப்படவில்லை என்றும் 1867ல்தான் மேசிஸ் பல்பொருள் அங்காடி (Macy's) தான் வியாபாரத்திற்காக நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் ஈவ் என்றழைக்கப்படும் நாளில் நள்ளிரவு வரை அங்காடியைத் திறந்து வியாபாரத்தை படு சுறுசுறுப்பாக நடத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்! உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது! குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா !

                 - நன்றி , கூகுள், மற்றும் கிறிஸ்துவ நண்பர்கள்.