பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 24 December 2014

இயக்குநர் சிகரத்திற்கு இரங்கற்பா. !







இயக்குநர் சிகரத்திற்கு இரங்கற்பா. !
                                    சி.குருநாதசுந்தரம்.

நல்லமாங்குடியில் பிறந்த
நல்லவனே !

நீ
பிரிந்த நொடிகளில்
இதயங்கள் பிளந்தன.

நினைவுகளை நீர்த்துப்போகச்செய்த
வாழ்வின் தடங்களை
விட்டுச்செல்லும் சமகாலமனிதருள்
நீ
விலகி நிற்கின்றாய் !

உன் சிகரம் தொடும்
உயிர்த்துடிப்பினை
எங்கினித் தேடுவோம்?

சிவாஜிராவைச் சிகரமாக்கிச்
சுமந்த இமயமே !

கமலென்ற கல்லில்
நடிகச்சிலை செதுக்கிய
சாகச்ச் சிற்பியே !

உன்
இமயத்துள் தான்
நட்சத்திரக்கூடுகள் உயிர்த்திருப்பதாக
உரக்கச்சொல்கின்றன திரையரங்குகள் !

அதனால் தான்
தாதாசாகேப்பால்கேவையும்
உன் வசமாக்கினாய் !

இருகோடுகளும் நீர்க்குமிழிகளும்
இதயத்தில் இன்னும்
நீங்கவில்லை ..
நீங்காத படைப்பின் வெளி !

கையளவு மனசின்
இரவுகளுக்காய் தவமிருந்த
தாய்மார்களின் விழித்த இரவுகள்
உன்
விழித்த உழைப்புக்குக் கிடைத்த
வெற்றியன்றோ?

தண்ணீர் தண்ணீர் பார்த்துத் தான்
சமூக அவலங்களை
உரக்கப்பேசும் உந்துதல்
இங்கு சாத்தியப்பட்டது.

காணாமல்போன குடும்ப உறவுகளை
நிழல்பிம்பத்தில் நிஜமாக்கிய
ஒளித்திரள் ஓவியனே !
நீ
நினைவுகளை வெல்லும்
உண்மைச் சரித்திரம்.

என்
மனத்தை வென்ற
உறவின் சித்திரம்!

எப்படியிங்கு
நீர்க்குமிழி பொய்யாகிப்போனது.?
தெரியாத கண்ணீர்குமிழிகள்
உன்னைத் தேடுகின்றன.

உன்
நினைவுகள் அழியாது,

வரலாறுகள் வற்றுவதில்லை…

No comments:

Post a Comment